அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளின் சரிவு எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
அமெரிக்க மத்திய வங்கி, வட்டிவிகிதத்தை கால் சதவீதம் அளவுக்கு குறைத்தபோதிலும் அந்த நடவடிக்கை தொடராது என அறிவித்ததால், அந்நாட்டு பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆசிய பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாகவும், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம், கடந்த ஜூனில் 0.2 சதவீதம் அளவுக்கு சரிந்தது, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை அளவு ஜூன் காலாண்டில் 4.32 லட்சம் கோடியாக அதிகரித்தது ஆகிய காரணங்களாலும், இந்திய பங்குச்சந்தைகள் இன்று இறங்குமுகமாக உள்ளன. முற்பகல் வர்த்தகத்தின் ஒருகட்டத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 469 புள்ளிகள் அளவுக்கு சரிந்து, 37 ஆயிரத்து 12 புள்ளிகளாக இருந்தது. இதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 140 புள்ளிகள் அளவுக்கு சரிந்து, 11 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே சென்றது.