திருப்புகழ்க் கதைகள் 145
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
அதல விதல முதல் – பழநி
மஹாசங்கல்பம் சொல்லும் செய்திகள்
இந்த மகாசங்கற்பத்தில் பல செய்திகளை நாம் அறிந்துகொள்ளலாம். இதிலே புவியியல் ரீதியாக, உலக அமைப்பும் அதன் உட்பிரிவுகளும் சொல்லப்படும் முறை வியப்போடு உற்றுநோக்கத்தக்கவை. அதுமட்டுமன்றிப் புராண இதி்ஹாசங்களில் சொல்லப்பட்ட இத்தகைய செய்திகளையும் புவியியல், விஞ்ஞான, வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கும் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்து பார்க்கலாம்.
காலம் பற்றிய சிந்தனை எவ்வாறு நம் முன்னோர்கள் உள்ளத்தில் தெளிவாக இருந்தது என்பதை அறிவதோடு, பருவகாலங்கள், அதன் உட்பிரிவுகள் இவைபற்றிய விரிவான சிந்தனைகள் கவனிக்கத்தக்கவை.
இவற்றோடு தத்துவார்த்தமான இன்னொரு சிந்தனையும் நமது உள்ளத்தில் துளிர்விடவேண்டும். நாம் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறோம். அந்தக் கிராமத்தின் பெயரையும் விரிவான சங்கல்பங்களின்போது சொல்கிறோம். அந்தக்கிராமத்தை அடுத்த நகரம், மாகாணம், நாடு, கண்டம் என விரிந்து கொண்டு போகின்ற இந்தப் பிரபஞ்சம் எனும் பெரும் அண்டத்தை இங்கு நாம் மனக்கண்ணால் காண முடிகிறது. நாம் இந்தப் பேரண்டத்தின் ஒரு துளியில் நிற்கின்றோம் என எண்ணி நமது சிறுமையையும் ஆண்டவனின் பெருமையையும் கருதவேண்டும். இதேபோல் நமது வாழ்நாள் ஆகக்கூடியது நூறு ஆண்டுகள். இந்தச் சங்கல்பத்திலே சொல்லப்படுகின்ற காலக்கணக்குகள் – யுக யுகாந்திரமாக இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் ஆண்டவனின் மகத்துவம்தான் என்னே என்ற வியப்பும் குறிப்பிடத் தக்கதன்றோ?
இந்த இடத்தில் நம்மிடையே வாழ்ந்து மறைந்த ஆரியப்பட்டர் என்ற மகானை நினைத்துப்பார்க்கவேண்டும். ஆரியபட்டர் ஆரியபட்டீயம் நூலினை எழுதியுள்ளார். ஆரியபட்டீயம் முழுவதும் வடமொழியில் செய்யுள் வடிவில் சூத்திரங்களாக எழுதப்பட்டதாகும். மொத்தம் 121 செய்யுள்களைக் கொண்டுள்ள ஆரியபட்டீயம், நான்கு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
அதன் முதல் பிரிவான கிடிபாதம் பதிமூன்று செய்யுள்களைக் கொண்டது. காலத்தின் மிகப்பெரும் அலகுகள் குறித்து இது விளக்குகிறது. கல்பம், மந்வந்திரம், யுகம் ஆகியவற்றின் காலக் கணக்கீடுகளை இதில் ஆரியபட்டர் விளக்கியுள்ளார். லகதரின் வேதாங்க ஜோதிஷம் (கி.பி. முதல் நூற்றாண்டு) தெரிவித்த பல கருத்துகளுடன் முரண்பட்டு தனது கருத்துகளை இதில் முன்வைத்துள்ளார் ஆரியபட்டர்.
இந்தப் பிரபஞ்சம் தோன்றிய மகா யுகத்தின் துவக்கம் 43.2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் என்பது பட்டரின் முடிவு. நவீன விஞ்ஞானமும் இந்தக் கணக்குடன் ஒத்துப் போகிறது. திரிகோணவியலின் அடிப்படையான சைன் அட்டவணையையும் கிடிபாதத்தில் பட்டர் அளித்துள்ளார்.
ஆரியபட்டீயம் நூலின் இரண்டாவது பிரிவான கணிதபாதம் (33 செய்யுள்கள்), எண்ணியல் (Arithmatics), வடிவியல், வானியலில் பயன்படும் கருவிகள், இருபடிச் சமன்பாடுகள் (Quadratic Equations), தேரவியலாச் சமன்பாடுகள் (Indeterminate Equations), அடுக்குத் தொடர்கள் (Power Series) குறித்து விளக்குகிறது.
மூன்றாவது பிரிவான காலக்கியபாதம் (25 செய்யுள்கள்), காலப் பகுப்பையும், நேரத்தின் சிறு அலகுகளையும் விளக்குகிறது. நாள், வாரம், மாதம் குறித்த விவரங்களும், கிழமைகளின் பெயர்களும் இப்பிரிவில் கூறப்படுகின்றன.
நான்காவது பிரிவான கோளபாதம் (50 செய்யுள்கள்), கோள்களின் நிலை, பூமியின் வடிவம், அதன் இயக்கம், பகல்} இரவு தோன்றுவதன் காரணம், கிரஹணங்கள் தோன்றுவதன் காரணம், ராசி மண்டலம் ஆகியவற்றை விவரிக்கிறது.
ஆரியபட்டர் கண்டறிந்த ஒவ்வொன்றும் கணிதம், வானியல் துறைகளில் முன்னோடியானவை. அவை அரபியில் மொழி பெயர்க்கப்பட்டு, பின்னாளில் லத்தீனிலும் கிரேக்கத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் பரவின. அவையே நவீன கணிதத்துக்கும் வானியலுக்கும் அடிப்படையாகின.
ஆரியபட்டீயத்தின் கணிதபாதமே பின்னாளில் அல்ஜீப்ராவாக வடிவெடுத்தது. கிடிபாதமே நவீன திரிகோணவியலுக்கான (Trigonometry) ஆதாரமாகும். காலக்கியபாதமும் கோளபாதமும் தற்கால வானியலுக்கு (Astronomy) ஆணி வேராகும்.
ஆரியபட்டரின் மேலும் சில சிறப்பான கண்டுபிடிப்புக்கள் நாளைக் காணலாம்.