இங்கிலாந்துடன் அடுத்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது இந்திய அணி. ஏற்கெனவே, இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரில் வென்று விட்டதால், ஒரு தெம்புடன் களத்தில் இறங்குகிறது இந்திய அணி.
டி20 தொடரில் கலக்கிய கே.எல்.ராகுல் இப்போது அணிக்கு பெரிய தலைவலியாகவே உருவெடுத்துள்ளார் எனலாம். காரணம், அவரை எந்த இடத்தில் களம் இறக்குவது என்பது இப்போதைய உச்ச பட்ச விவாதமாக இருக்கிறது. கே.எல்.ராகுலின் உச்ச பட்ச திறமையையும் பார்மையும் இப்போது சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அணியில் அனைவரும் விரும்புகின்றனர்.
இந்நிலையில் அணியின் துணை தலைவரான ரோஹித் சர்மா புதன்கிழமை அணியின் நிலை குறித்துக் கூறியபோது, நான் எந்த நிலையிலும் இறங்கத் தயார். அது 3, அல்லது 4 எதுவாக இருந்தாலும் சரி, அணியின் ஆலோசனைப் படி இறங்குவேன். ராகுலின் அபார பேட்டிங் கைகொடுக்க அவர் எந்த நிலையில் இறங்குவார் என்பது அணித்தலைவர் விராட் கோலி கையில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.