“குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருக்கும் திறனாய்வு அவருடையது என்பது எனது கருத்து. மேலும், நல்ல விமர்சகனுக்குத் தனிப்பட்ட மனமாச்சரியங்கள் இருக்கக்கூடாது.
க.நா.சு.வுக்கு அது உண்டு.
நான் தில்லியில் இருந்த நேரம். தனக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைப்பதற்கு, க.நா.சு. கையாண்ட வழிகளும், மேற்கொண்ட பிரயத்னங்களும் அப்போது சாகித்ய அகாதெமியில்
சந்தி சிரித்தது.
“சாகித்ய அகாதெமி’ விருதுக்கு முழுக்க முழுக்கத் தகுதியானவர் அவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இலக்கியத் திறனாய்வுக்காக அல்ல; படைப்பிலக்கியத்துக்காக
விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
***
– மேற்கண்ட இந்தக் கருத்தை எழுதியிருப்பவர், தினமணியின் கலாரசிகன்! தேதி: 2013 ஜூன் 1, ஞாயிறு வரும் தமிழ்மணியில் – இந்த வாரம் பகுதியில்!
அவருக்கு க.நா.சு.,வை விமர்சிப்பதில் என்ன உரிமை இருக்கிறதோ… அதே உரிமை, அவரைப் பற்றி விமர்சிப்பதில் ஓர் இதழாளனான எனக்கும் உண்டு.!
இலக்கிய விருதுகளைப் பெறுபவர்கள், இலக்கிய உலகின் இதழாளர்களாக அல்லது, இலக்கியப் பத்திரிகையாளராக இருக்க வேண்டும்! அரசியல் எழுதும் நாளிதழ் பணியில் இருக்கக் கூடாது! அமுதசுரபி, கலைமகள், கணையாழி, என அரசியல் சார்பற்ற, இலக்கியம் மட்டுமேயான தளத்தில் இயங்கும் பத்திரிகாசிரியர்களுக்கு அரசின் விருதுகள் வழங்கப்பட்டால்… அதில் ஓரளவு நியாயம் கற்பிக்கலாம்…!
நாள் தொடங்கினால்… தலையங்கம் மூலம், அதிமுக.,வுக்கு வால் பிடிக்கும், அல்லது எதிர் நிலை எடுக்கும், அல்லது விமர்சனம் ஒன்றால் மட்டுமே அரசியல் நிலைப்பாட்டை வாசகருக்கு எடுத்து முன்வைக்கும் நாளிதழின் ஆசிரியர்கள், அரசின் விருதுகளுக்கு முன் நிற்பது… நாளிதழ் உலகுக்கே அவமானம்!
சரி போகட்டும்.. அதிமுகவின் முதன்மை கட்சிப் பத்திரிகை ஆகிவிட்டதால்… வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது!
ஆனாலும்…
உடன் இருக்கும் ஒருசிலரே… அல்லது, இதே திரு.வி.க., விருதுக்காக அரசுத் தரப்புக்கும் ஆசிரியத் தரப்புக்கும் இடைத்தரகு வேலை பார்த்த ஒருவரே கூட… நாளை எழுத்தாளராகி, அல்லது பத்திரிகையாளராகி…
இதே வார்த்தை நடையில், “சந்தி சிரித்தது” என்று எழுதாமல் போவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லைதான்!
என்ன இருந்தாலும் ’குரு‘ எண்ணெய்ச் சட்டியில் பொரித்து எடுத்த சீடைகள்தானே!


