ஈரமிலா மண்ணும் மனிதனும்!

Published:

courtallamwall நீரின்றி அமையாது உலகு சொல்லி பயன் என்? வரண்ட பூமி வற்றிய கிணறு ஏற்றக் கலனில் கரையான் கலன்பிடித்த தோள்களில் ஏக்கம் குளம்பு தேய்ந்த நிலையில் நுரைதள்ளிய காளைகள் பாளம் விட்ட நிலத்தில் இரைதேடும் நாரைகள் பசுந்தாள் தலையசைத்த நினைவு பாசத்தால் தலைகுனிந்த நனவு! அத்தியாவசியத் தேவைப் பட்டியலில் முதல் தேவை இங்கிருந்துதான் பூர்த்தியாகும்! உணவு…! உணவு..! உணவு..! இனி  எல்லாம் கனவு..! கனவு..! கனவு..! மூன்றாம் தேவையை முடித்துவைக்க முண்டியடித்து வருகிறார்கள் இதோ… உறைவிடமாம்! இல்லை இல்லை.. காசை வீசி நிலத்தை தரிசாய்ப் போட்டுவைக்க … காரேறி வருகிறார்கள்… இதோ… ரியல் எஸ்டேட்காரர்கள்! பாளம் பாளமாய் வெடித்த பூமி பிளாட்டு பிளாட்டாய் தரிசாகிப் போகும்! சந்ததிக்கும் சுகத்துக்கும் பெண்ணைத் தேடி பந்தம் விதைக்கும் மானிடா… பயிருக்கும் நிலத்துக்கும் பந்தத்தை அறுத்து பணத்தாசை கொண்டாயே! நெஞ்சமதில் ஈரமிலா மனிதர்தாம் பஞ்சத்தால் ஈரமிலா மண்ணும்தான்!

Related articles

Recent articles

spot_img