குடிக்காதே என்று சொன்னது குத்தமாய்யா..?! நண்பனின் நட்புக்காக மனைவியையே கொலை செய்துவிட்டார் இந்த பாசக்கார கணவன் என்று அதிர்ச்சியுடன் கூறுகின்றனர் பெருங்குடி இந்திரா தெரு மக்கள்.
தனது நண்பர்களை வீட்டின் அருகே அழைத்து வந்து மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த கணவனை மனைவி கண்டித்தார்! இதனால் கோபப்பட்ட கணவன் தன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தான்! அந்தக் கணவனை போலீசார் தேடி வருகின்றனர்!
சென்னை பெருங்குடி இந்திரா தெருவை சேர்ந்தவர் உதயகுமார். 30 வயதான இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி மணிமேகலை ! இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது.
உதயகுமார் வீட்டின் அருகே நண்பர்களை அழைத்து வந்து மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இது மணிமேகலைக்கு அறவே பிடிக்கவில்லை.
கடந்த 25ஆம் தேதி இரவு மாணிக்கவேல் என்ற நண்பரை அழைத்து வந்து மது அருந்தியுள்ளார். இதற்கு மணிமேகலை உதயகுமாரை கண்டித்துள்ளார். ஆனால் அதனால் கோபம் அடைந்த மாணிக்கவேல் சிறிது நேரத்தில் மணிமேகலையை தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணிமேகலை, மாணிக்கவேல் குறித்து நேற்று முன்தினம் போலீசில் புகார் செய்துள்ளார். இதை அடுத்து மாணிக்கவேலை அழைத்த போலீஸார், அவரை கண்டித்து அனுப்பியுள்ளனர்.
தன் நண்பன் மீது மனைவி போலீஸில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த உதயகுமார், இரவு வீட்டுக்குச் சென்று மணிமேகலையுடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த உதயகுமார் மணிமேகலையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, பிறகு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
மனைவியைக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிட்ட உதயகுமாரை துரைப்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்!