சென்னை: 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனுடன் அவரது பெற்றோர் ஒன்று சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு மோகன வடிவேலன் சரவணன் என்ற மகன் உள்ளார். நாகேஸ்வர ராவ் பெயின்டர் வேலை செய்து வந்தார். அவரது மகனை 1999ம் ஆண்டு புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டார்.
கடத்தப்பட்ட சிறுவனை எம்எஸ்எஸ் எனப்படும் மலேஷியன் சோஷியல் சர்வீஸ் எனும் அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அங்கே சிறுவனது ஆங்கில திறமையை பார்த்து வியந்த அமெரிக்க தம்பதிகள் தத்தெடுத்துச் சென்று வளர்த்துள்ளனராம்..
தற்போது, நாகேஸ்வர ராவின் மகனுக்கு 22 வயதாகிறது. அமெரிக்காவில் உள்ள தங்கள் மகனை.மீட்டு தங்களுடன் சேர்த்து வைக்கும்படி, நாகேஸ்வர ராவ் தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுபற்றிய நீதி விசாரணை நடந்ததன் விளைவாக, அமெரிக்காவில் உள்ள மோகன வடிவேலுவை, எம்எஸ்எஸ் அமைப்பு பெரும் முயற்சி எடுத்து, சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து, நாகேஸ்வர ராவ், சிவகாமி தம்பதியினர் தங்களது மகனை 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சந்தித்துப் பேசினர். இச்சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்வதாக உள்ளது என்று, இவ்விவகாரத்தில் நாகேஸ்வர ராவ் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.