தமிழ் சினிமா துணை நடிகையை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்த பக்ருதீன் என்ற நபரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
சென்னை வடபழனி ஆற்காடு சாலையைச் சேர்ந்தவர் ஜெனிஃபர். 24 வயதான இவர் சினிமா தொலைக்காட்சி மற்றும் குறும் படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அவரது புகாரில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் எனக்கு அறிமுகமானார். நண்பராக இருந்த அவர் என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வருகிறார். அவர் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் என்னையும் என் தாயையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் பக்ருதீன் ஆபாச படமெடுத்து துணை நடிகையை மிரட்டியது உறுதியானது. இதையடுத்து மகளிர் போலீசார் அவரைக் கைது செய்தனர்.