‘அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுவேன்; குறுக்கு வழியில், சசிகலா பொதுச்செயலராக விடமாட்டேன்’ என, சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தேர்தல் அறிவிக்காமல், குறுக்கு வழியில், பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச்செயலராக சசிகலா திட்டமிட்டுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களை, பஸ்சில் அழைத்து வந்து, கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளனர். நான், அ.தி.மு.க., – எம்.பி.,யாக உள்ளேன்; கட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ளேன். நான் கட்சியில் இருந்து, நீக்கப்பட்டதற்கான கடிதம் எதுவும் எனக்கு வரவில்லை. என் கணவர் லிங்கேஸ்வரனும், கட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ளார். அவர், மும்பையை சேர்ந்த, பொதுக்குழு உறுப்பினர் மணி மற்றும் சிலருடன், கட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றார்.
ஜனநாயக முறைப்படி, போட்டியிட மனு கொடுக்க சென்றவரை, சசிகலாவின் ஆதரவாளர்கள் தாக்கி உள்ளனர். கட்சி அடிப்படை உறுப்பினரில், யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஒன்றரை கோடி தொண்டர்கள் சேர்ந்து, பொதுச்செயலரை தேர்வு செய்ய வேண்டும்.ஆனால், சசிகலா, குறுக்கு வழியில் பொதுச்செயலராக விரும்புகிறார். அவருக்கு ஆதரவு உள்ளது என்றால், முறைப்படி தேர்தலை நடத்தலாம். அவரை, தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும், பொதுச்செயலரை தேர்வு செய்ய முடியாது. போட்டியிட விரும்புவோருக்கு, வாய்ப்பு அளிக்க வேண்டும். நான், பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடுவேன்; சசிகலா, பொதுச்செயலராக விட மாட்டேன்; சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் தெரிவித்தார்.