முரசொலி அலுவலகம், அதிரடியாக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரணை கோரி, பாஜக., சார்பில் மனு அளிக்கப் பட்டுள்ளது.
பாஜக., மாநில செயலாளர் மதுரை பேராசிரியர் இரா. ஸ்ரீனிவாசன், எஸ்சி ஆணைய துணைத் தலைவர் டாக்டர் எல்.முருகனிடம் இதற்கான கோரிக்கை மனுவை அளித்துள்ளதாக தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். முரசொலி தினப் பத்திரிகை அலுவலகம் முறைகேடாக பஞ்சமி நிலத்தை அபகரித்து கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோருவதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது…
முரசொலி அலுவலகம் #பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டை, தீர விசாரிக்கும் படி தேசிய SC கமிஷன் துணைத் தலைவர் டாக்டர் L முருகன் அவர்களிடம் புகார் அளித்தேன். விசாரிப்பதாக மாண்புமிகு முருகன் அவர்கள் உறுதி அளித்தார். – என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
பாஜக.,வின் தேசிய செயலர் ஹெச்.ராஜா தமது டிவிட்டர் பதிவில்,
பட்டாவாங்கியிருப்பது 1985 என்றால் முரசொலி ஆரம்பிக்கப்பட்டது 1956 ல். ஸ்டாலின் ஏன் இன்னும் மூலபத்திரத்தை வெளியிட வில்லை? பஞ்சமி நிலத்தை அபகரிக்கின்ற பாதகர்களின் கட்சி திமுக என்ற கேள்வி எழுகிறது. ஆகவே மூலபத்திரத்தை வெளியிட வேண்டும். அதுக்கு ஏன் இவளோ தயக்கம்??? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆக… பாஜக.,வும் பஞ்சமி நில விவகாரத்தில் திமுக.,வுக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கியுள்ளது தெரிகிறது.
ஒரு படத்தைப் பார்த்துவிட்டு வந்து ஏதோ கருத்து சொல்வதாக நினைத்து ஸ்டாலின் இப்போது இடியாப்பச்சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்!