சிதம்பரம் போலீஸார் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்திருப்பதாக, தீட்சிதர் தர்ஷன் மனுவில் கூறிய கருத்துக்கு பதில் அளிக்குமாறு போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில், முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தர்ஷன் 2-வது முறையாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கோவில் நடை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டுமென தகராறு செய்ததாகவும், தன்னை நோக்கி கையை தூக்கியதால், தற்காப்புக்காக தள்ளி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கெதிராக போலீசார் பொய் வழக்கு பதியப் பட்டிருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளர். எனவே, இது தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் தர்ஷன், அர்ச்சனை செய்து வழிபட வந்த பெண்மணியை தாக்கியதாக தகவல் வெளியானது. இது குறித்து சிதம்பரம் தீட்சிதர் வட்டாரங்களில் குறிப்பிடப் படுவதாவது…
அந்தப் பெண்மணி, அர்ச்சனைக்கு தட்டைக் கொண்டு வந்து கொடுத்தாராம். இவர் அருகே நின்றிருந்த அசிஸ்டெண்ட் தீட்சிதர் சிறுவனைப் பார்த்து, தேங்காய ஒடச்சிட்டுகொண்டு வா என்று கூறியிருக்கிறார். அந்தப் பையன் எள் என்றால் எண்ணெய் ரகம் போலுள்ளது… தேங்காயை உடைத்து, ஸ்வாமிக்கு நைவேத்தியமே செய்துவிட்டு, அதில் அர்ச்சனைப் பூக்களையும் போட்டு கொண்டு வந்துவிட்டானாம்…
இந்த அம்மா கேட்டிருக்கிறார்… ஏஞ்சாமி பையன் பிறந்த நாள், அர்ச்சனை செய்து, நைவேத்யம் செய்து பிரசாதம் கொடுப்பீங்கன்னுதானே பாத்தேன்… இப்படி செய்யிறீங்களே.. பையன் பேரு நட்சத்திரம் கூட கேக்கலியே என்று கூறியிருக்கிறார்…
அதற்கு தர்ஷன், அதனாலென்னா… நீங்களே உங்க பையன் பேரு நட்சத்திரத்தை எல்லாம் மனசில நெனச்சிக்க வேண்டியதானே… என்று சொல்லியிருக்கிறார்…
நாங்களே மனசில நினைச்சிக்க… நீங்க என்ன மயித்துக்கு இங்க ஒக்காந்திருக்கீங்க… என்று அவர் கேட்டிருக்கிறார்…?!
அதன்பின்னர்… வாக்குவாதம் முற்றியதாகக் கூறப் படுகிறது! அப்போது, ஒருவரை ஒருவர் தாக்க முனைந்த போது, அந்தப் பெண்மணியை இவர் தடுத்ததாகவும், அந்தப் பெண்மணி நிலை தடுமாறி கீழே சரிந்ததாகவும், ஆனால் தாம் கீழே விழுந்ததாகவும், காயம் பட்டதாகவும் போலீசில் புகார் கொடுத்டிருக்கிறார் என்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் கோயிலில் சிசிடிவி பதிவு கிடைக்கவில்லை என்கிறார்கள். காட்சிப் பதிவு வசதி அங்கே இல்லையாம்.
இதை அடுத்து, தீட்சிதர்கள் ஒன்று கூடி, ரூ. 5 ஆயிரம் அபராதம், 2 மாதம் கோயில் பணியில் இருந்து சஸ்பெண்ட் என முடிவு செய்திருக்கிறார்கள்.