பொது இடங்களில் ஆபாசமாக நடந்தால் மக்கள் தடுக்க வேண்டும்: ராம.கோபாலன்

Published:

சென்னை:
பிப்.14ம் தேதி அன்று பொது இடங்களில் ஆபாசமாக நடந்தால், பொதுமக்கள் தடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று இது குறித்து ராம.கோபாலன் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை:

கலாச்சாரத்தை, பண்பாட்டைக் காக்க இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும். பண்பாட்டுச் சீர்குலைவை அரசு தடுக்க வேண்டும்..
நமது பண்பாடு, கலாச்சாரம் ஒருபுறம் முடக்க நடவடிக்கை எடுக்கும் மேற்கத்திய நாடுகள், நாகரிகம் என்ற பெயரில் அவர்களின் கலாச்சாரத் திணிக்க பலவிதமான தகிடுதத்தங்களில் ஈடுபடுகிறார்கள். ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என ஒரு கிளர்ச்சியை மாணவர்களிடம் ஏற்படுத்தி, அதன் மூலம் மற்றவர்களை முட்டாள்களாக நினைக்கும் கேவலமான, கொடிய நஞ்சை மாணவப் பருவத்தில் விதைத்தார்கள். அதன் தாக்கம் தற்போது நீர்த்துப் போன நிலையில், காதல் தினம் என்ற கழிசடைத்தனத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். இதற்கு வியாபாரத்தனமான ஊடகங்கள் துணை போகின்றன.

சமீபத்தில் மாணவர்கள், இளைஞர்கள் நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டைத் தடை செய்ததை எதிர்த்து, நமது பண்பாடு, பாரம்பரியம் காக்கும் மிகப் பெரிய அறப்போராட்டத்தில் ஈடுபட்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தனர். ஆனால், அதனையும் நாசப்படுத்த சில நாசகார சக்திகள் உட்புகுந்தன, மத்திய, மாநில அரசுகள் திறம்பட சமாளித்தும், மாணவர்கள், இளைஞர்கள் விழிப்புடன் செயல்பட்டும் அந்தத் தீய சக்திகளை தனிமைப்படுத்தவும், ஜல்லிக்கட்டு நடந்திடவும் தீர்வு கண்டனர்.
மேற்கத்திய கலாச்சார திணிப்பு என்பது வியாபார நோக்கம் கொண்டது என்பதை இளைஞர்கள், மாணவர்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுபோல, காதலர் தினம் எனும் நச்சு பிரச்சாரத்தை முறியடிக்க முன் வர வேண்டும்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

பொது இடங்களில், ஆலயங்கள் போன்ற புனித இடங்களில் காதலர் என்ற பெயரில் அநாகரிகமாக நடந்துகொள்வோரை பொதுமக்கள் தடுக்க வேண்டும். காவல்துறையினர் மிகுந்த விழிப்புடன் இருந்து இந்த அநாகரிக கிளர்ச்சியைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

அப்படி மீறி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்பவர்களை இந்து முன்னணி தொண்டர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைப்பார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறோம். பண்பாட்டைக் காக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Related articles

Recent articles

spot_img