தென்காசி : தென்காசியில் உள்ள பிரதான சாலைகளில், இரவு மற்றும் பகல் நேரங்களில், நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகளிடம், திருநங்கைகள் சாலையில் அத்துமீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தென்காசி பழைய பேருந்துநிலையம் யானைபாலம் உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது அந்த பகுதிகளில் திருநங்கைகள் சிலர், சாலையில் நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோரை வழிமறித்து வாக்குவாதம் செய்து, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஒரு சிலர் பகிரங்கமாக, பாலியல் தொழிலுக்கு அழைப்பதும், பாலியல் தொந்தரவு செய்வதும் வழக்கமாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மாலை மற்றும் இரவு நேரங்களில், அந்த பகுதிகளில் செல்லவே அஞ்சும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது:
திருநங்கைகள் வருமானத்திற்கு வழியில்லாமல் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களும் அவர்களின் அத்துமீறலை ஓரளவிற்கு சகித்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, திருநங்கைகள் பலர், அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்ன செய்வது? இதுகுறித்து காவல்துறையினரிடம், புகார் அளித்தால், எந்த பாலினத்திலும் சேராத திருநங்கைகள் மீது, எந்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வது என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த விவகாரத்தில், உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏதேனும் திட்டங்கள் தீட்டி அமல்படுத்தினால் தான் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். தென்காசி காவல் நிலையத்தில் திருநங்கைகளின் மோசடி புகார் பல நிலுவையில் இருப்பதாகவும் விசாரணை கூட நடத்துவதற்கு போலீசார் தயாரில்லை எனவும் குற்றம் சாட்டிவருகின்றனர் விவரம் அறிந்தவர்கள்