
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, இரவு 9 மணி முதல் 12 மணி வரை என தினமும் மின்வெட்டு செய்யப்படுவதால், தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து புகார் அளிக்க மின்வாரிய அலுவலகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டால் முறையாக பதிலளிப்பதில்லை, என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”கொரோனா வைரஸ் தொற்று நோயினால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த சூழ்நிலையில் பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இரவில் புழுக்கத்தால் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பு அச்சத்தினால் மின்வெட்டு நேரங்களில் வீட்டின் வெளியே மற்றும் வீட்டின் மாடியில் செல்வதற்கே பொதுமக்கள் அஞ்சுகின்றனர். குறிப்பாக, முதியோர் மற்றும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க முயற்சித்தால் அவர்கள் அலட்சியமாக பதில் அளிப்பதோடு, இணைப்பையும் துண்டித்து விடுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.


