திருநெல்வேலி மாநகரத்தில் மார்க்கெட் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பேண வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம் அனைத்து காவல் நிலைய பகுதியிலும் நடைபெற்றது. டவுன் காவல்நிலைய சரகத்தில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பங்கேற்றார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளன. பொதுமக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இதுவரை 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 5047 நபர்கள் மீது 3517 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 3454 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில்,
2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று அடிப்படை பயிற்சியில் சேர தகுதியுள்ள திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர்கள் 03.05.2020 தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படையில் வந்து அறிக்கை செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
பயிற்சிக் காவலர்கள் அனைவரும் அனைத்து அசல் சான்றிதழ்கள், மற்றும் ஆதார் அட்டை, Passport Size Photo கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.