
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு உதவித்தொகையாக, மேலும் ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கு இந்த நிவாரணத் தொகையை அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே சிறப்பு நேர்வாக ரூ.1,000 ரொக்க நிவாரணமாக வழங்கப்பட்டது! ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மேலும் ரூ.1000 நிவாரணம் அளிக்கப் படுவதாக அறிவித்துள்ளது தமிழக அரசு!
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு: ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் பங்குத்தொகை/ தட்டுக்காணிக்கை மட்டுமே பெறும் 2,108 அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியார்கள்/ பூசாரிகளுக்கும், ஒரு கால பூஜை நிதியுதவி பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் 8,340 அர்ச்சகர்கள்/ பட்டாச்சாரியார்கள்/ பூசாரிகளுக்கும், திருக்கோயில்களில் சம்பளமின்றி பங்குத்தொகை மட்டுமே பெற்றுக்கொண்டு பணிபுரியும் நாவிதர், காது குத்துபவர்/ஆசாரி, நாமாவளி, மிராசு, கணக்கு, கங்காணி திருவிளக்கு முறைகாவல் மேளம், நாதஸ்வரம், குயவர், புரோகிதர் போன்ற பணியாளர்களுக்கு ஏற்கனவே ரூ.1,000 ரொக்கம் நிவாரணமாக வழங்கப்பட்டுவிட்டது.
ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மேற்குறிப்பிட்ட பிரிவினருக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக திருக்கோயில் நிதியில் இருந்து வழங்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



