திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள மேல கொத்தம் பட்டியைச் சேர்ந்த வீராசாமி மகன் ஆதித்யா(13). நேற்று அப்பகுதியிலுள்ள கரட்டு மலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, ஒரு பாறையில் உட்கார்ந்து செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராமல் செல்போன் பாறை இடுக்கில் விழுந்து விட்டது. அதை எடுப்பதற்காக ஆதித்யா அப்பாறை இடுக்கில் தவழ்ந்தபடி சென்றபோது, பாறை இடுக்கில் தலை சிக்கிக் கொண்டது.
இதனால் பயத்தில் அவர் அலறியதைக் கேட்டு அப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்த சிலர் ஓடிவந்து மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து, துறையூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சிறுவனை உயிருடன் மீட்டனர்.
துரிதமாக செயல்பட்டு சிறுவனை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.