சென்னை அடுத்து செங்குன்றம் பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் குமார். இவர் குடும்பத்தோடு கடந்த 5-ம் தேதி வீட்டில் இருந்துள்ளார். அப்போது பைக்கில் அவரது வீட்டிற்கு சென்ற 10 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளை சம்பவம் குறித்து குமார் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் விசாரித்தனர். 5 இருசக்கர வாகனத்தில் 10 பேர் வந்தது தெரியவந்தது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். செங்குன்றத்தில் புறப்பட்ட இருசக்கர வாகனங்கள் தண்டையார்பேட்டை வரை சென்றது தெரியவந்தது.
கொள்ளையில் ஈடுபட்டது வியாசர்பாடியைச் சேர்ந்த 32 வயதான ரகு தலைமையிலான கும்பல் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் பதுங்கி இருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அங்கிருந்த ரகு அவரது கூட்டாளிகளை கைது செய்தனர்.
கைதானவர்களிடம் குமார் வீட்டில் நகை இருப்பது எப்படி தெரியும், குமார் வீட்டை தேர்ந்தெடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஏன் என விசாரித்தனர். அப்போது அவர்கள் திடுக்கிடும் தகவலை கூறினர்.
குமாரின் இரண்டாவது மனைவி, கணவருக்கு தெரியாமல் வீட்டில் வைத்தே ரகசியமாக பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். லாரி ஓட்டுநரான குமார் வெளியூர் செல்லும் நேரத்தில் வாடிக்கையாளர்களை வீட்டுக்கு வர வைத்து, வீட்டின் மாடியில் உள்ள கூரை வீட்டில் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.
இதற்காக சில பெண்களை உறவினர்கள்போல் வீட்டுக்கு அழைத்து, அக்கம்பக்கத்தினருக்கு தெரியாமல் ரகசியமாக செய்து வந்துள்ளார். அங்கு தனது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள அடிக்கடி சென்று வந்துள்ளார் ரகு. அப்போது, குமாரின் மனைவி பாலியல் தொழில் செய்து அதிக அளவில் பணம் வைத்திருப்பது தெரிய வந்தது.
இதனால் கூட்டாளிகளுடன் சேர்ந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். குமாரின் மனைவி சட்டவிரோத செயலில் ஈடுபடுவதால், போலீசில் புகார் அளிக்க மாட்டார் என நினைத்து செய்ததாகவும், இந்த விவகாரம் எதுவும் தெரியாத குமார் போலீசில் புகார் அளித்ததால் தாங்கள் சிக்கிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
ரகு உள்ளிட்டவர்கள் குமார் வீட்டில் கொள்ளையடித்த ஏழரை சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு, 3 செல்போன்கள், கொள்ளைக்கு பயன்படுத்திய கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.
சென்னையில் ஊரடங்கால் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களை வீட்டுக்கு வர வைத்து வீடுகளிலேயே பாலியல் தொழில் செய்யும் சம்பவமும், அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருமுல்லைவாயல் மற்றும் ஆவடி பகுதியில் வீட்டில் வைத்தே பாலியல் தொழில் நடைபெற்ற இடங்களில் மிரட்டி பணம், நகை பறித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அவர்கள் யாரும் புகார் அளிக்க முன்வராததால் அந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வராமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.