அரசு பள்ளி கணினி ஆசிரியர் இறுதி தேர்வு பட்டியலும், உடற்கல்வி இயக்குநர் எழுத்துத்தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 652 கணினி பயிற்றுநர்களை (கணினி ஆசிரியர்) நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது. பணிநியமன ஆணை விவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை மூலம் விரைவில் அறிவிக்கப்படும். இதேபோல், முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 10-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. பிப்ரவரி 25-ம் தேதி முதுகலை பட்டதாரி தேர்வு முடிவு மட்டும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், உடற்கல்வி இயக்குநர் தேர்வு முடிவும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


