சென்னை: எனகு அச்சுறுத்தல் உள்ளது. என்னைக் குறிவைத்து அச்சுறுத்துகிறார்கள் என்றார் நடிகர் கமல்ஹாசன். இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன். தனது உத்தமவில்லன் படம் குறித்து விளக்குவதற்காக இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த சந்திப்பின் போது கமல்ஹாசன் கூறியவை… அச்சுறுத்தல் எந்தத் துறையில்தான் இல்லை. எனக்கும் கூட அச்சுறுத்தல் உள்ளது. அச்சம் இருக்கிறது என்பதை விட நம்மை அவர்களே வழிநடத்துகிறார்கள். ஏன் பத்திரிகையாளர்களான உங்களுக்கும் கூட பத்திரிகையில் என்ன எழுத வேண்டும் என்று உங்களுக்கு சொல்வார்கள். சமூக வலைதளங்கள் பரிணாம வளர்ச்சியின் சான்று. அதை யாரும் தடுத்து விட முடியாது. என்னை மட்டும் ஏனோ குறிவைத்து எதிர்க்கிறார்கள் என்று கூறினார் கமல்ஹாஸன். நான் ஒவ்வொரு படத்திலும் இடையூறுகளைச் சந்திக்கிறேன். என் முகவரியை கேட்டால் இடையூறு என்று சொல்லலாம். வீட்டு நம்பருடன் இடையூறு தெரு என்றுகூட போடலாம். அந்த அளவுக்கு எதிர்ப்புகளைச் சந்திக்கிறேன். ‘தசாவதாரம்’ படம் எடுத்தபோது ஒருவர் என்னுடைய கதை என்று வழக்குப் போட்டார். ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படம் எடுத்த போது அந்த பெயரை வைக்கக்கூடாது என்றனர். மும்பைக்கு எப்படி தமிழ் வார்த்தை கண்டுபிடிப்பது? ‘சண்டியர்’ படத்தை எடுத்தபோது எதிர்த்தனர். அதன் பிறகு ‘சண்டியர்’ என்ற பெயரிலேயே ஒரு படமும் தயாராகி வெளிவந்து விட்டது. ‘பாபநாசம்’ படத்தை எதிர்த்தும் வழக்கு போட்டனர். நல்ல வண்டி என்னை மட்டும் ஏனோ குறிவைத்து எதிர்க்கிறார்கள். இது நல்ல வண்டி இலவசமாக ஏறிப்போய் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடலாம் என்று கருதி இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். மருதநாயகம் மருதநாயகம் படத்தை எடுக்க என் நண்பர்கள் முயற்சிக்கின்றனர். இது ஒரு உலகப் படம் என்று அவர்களுக்கு நினைவூட்டுகிறேன். சினிமா என்பது தயாரிப்பாளர்களுக்கு ஒரு வியாபாரம். அந்த வியாபாரம் முடிந்தபிறகு அதில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பணத்தை திருப்பிக் கேட்பது சரியல்ல. ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். பாதியில் எழுந்துவிட்டு, எனக்கு படம் பிடிக்கவில்லை; அதனால் பாதிப் பணத்தை எனக்குத் திருப்பி தாருங்கள் என்று கேட்டால் எப்படி முடியும்? அது சாத்தியமானதும் அல்ல என்று கூறினார் கமல்ஹாசன். அண்மையில் லிங்கா படத்தில் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ரஜினி காந்திடம் பணத்தை திருப்பிக் கேட்ட விவகாரத்தில் கமல் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
என்னைக் குறிவைத்து அச்சுறுத்துகிறார்கள்: உத்தமவில்லன் கமல்ஹாசன்
Popular Categories


