கருணாநிதியை அவமானப்படுத்த ‘மு.க.ஸ்டாலின்’ எனக் கூறினாலே போதுமானது என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சக்கர நாற்காலியில் அமரும் வரை தான் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார். இது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியைக் குறிப்பதாக, திமுகவினர் கோபமடைந்தனர். இதையடுத்து, தான் கருணாநிதியைக் குறிப்பிடவில்லை எனவும், அவர் மீது தமக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது எனவும், கமல்ஹாசன் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 8) சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், கருணாநிதியை அவமானப்படுத்த ‘மு.க.ஸ்டாலின்’ என்று கூறினாலே போதுமானது என்று கமல் தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கமலிடம், கருணாநிதியை அவமானப்படுத்த ‘ஸ்டாலின்’ என்று கூறினாலே போதுமானது என, நீங்கள் கூறியதன் அர்த்தம் என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “அந்தக் கூற்றே விளக்கத்தைக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், தனிமனிதத் தாக்குதலை முன்னிறுத்துகிறீர்களா என்ற கேள்விக்கு, “தனிமனிதத் தாக்குதல் இல்லையே. நான் கருணாநிதியை அவமானப்படுத்தியதாகச் சொன்னார்கள்.
அவமானப்படுத்த வேண்டும் என்றால் இப்படிக் கூட சொல்லலாம் என்றுதான் சொன்னேன். இன்றைக்கு தனிமனிதத் தாக்குதல் இல்லாமல் யார் அரசியல் செய்கின்றனர்? இது அகோரமான விஷயம் இல்லையே. நிஜம்தானே” என்று கமல் பதிலளித்தார்.