சென்னை: விமான நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ வாசுதேவன்(46). இவர் சில நாட்களுக்கு முன்னர் மத்தியக் குற்றப் பிரிவு போலீசில் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அந்த மனுவில், சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், தன் மனைவி யுவராணியுடன் சேர்ந்து சென்னை திருவொற்றியூரில்2013ம் ஆண்டில் டிஆர் எஸ் காம்ப்ளக்ஸில் எஸ்.எஸ்.டிரெண்ட்ஸ் என்ற பெயரில் ஒரு சேவை
நிறுவனம் நடத்தி வந்தார். அவர்கள், என் மகனுக்கு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினர். அவர்கள் சொன்ன உறுதி மொழியை நம்பி ரூ. 1.5 லட்சம் அவர்களிடம் கொடுத்தேன். ஆனால், சொன்னபடி அவர்கள் வேலை வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அவர்கள் வங்கி காசோலை ஒன்றைக் கொடுத்தனர். ஆனால் அந்தக் காசோலை பணம் இல்லாமல் திரும்பியது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், மோசடியில் ஈடுபட்ட ராமச்சந்திரன் (30), யுவராணி(26), அவர்களது கூட்டாளிகள் கனியன் (26), ஏழுமலை(26) ஆகியோரைக் கைது செய்தனர்.
விமான நிறுவன வேலை வாங்கித் தருவதாக மோசடி: 4 பேர் கைது
Popular Categories


