பணம் கொடுத்து பதவிக்கு வந்த எல்லா துணைவேந்தர்களுமே ஊழல்வாதிகள்தான் என்று கூறினார் டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நடைபெறும் கட்சிப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்காக வருகை தந்தார் நாஞ்சில் சம்பத் .
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், பஸ் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்களைக் கைது செய்து தமிழக அரசு தவறு செய்துள்ளது. கைது செய்யப் பட்ட மாணவர்களை உடனே விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 60களில் நடந்தது போல், அண்மையில் நடந்த போராட்டம் போல், மீண்டும் ஒரு மெரினா புரட்சி வெடிக்கும் என்று எச்சரித்தார்.
மேலும், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து கருத்து தெரிவித்த நாஞ்சில் சம்பத், அனைத்து துணை வேந்தர்களுமே முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள்தான் என்று கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது…
இந்த ஆட்சிக்கு எதிரான அலை எல்லாத் தரப்பு மக்களிடமும் இருக்கிறது. இதை சரியான திசையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு மகத்தான பயணத்தை டிடிவி தினகரன், காவிரி டெல்டா பகுதியில் மேற் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் தில்லியில் அடகு வைத்து விட்டார்கள். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள ஆய்வு என்று சொல்லி, தெருவுக்கு வந்துவிட்டார். ஒரு கவர்னர், தனக்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கடமைகளை மறந்துவிட்டு, ஒரு பஞ்சாயத்து தலைவரைப் போல் எல்லாப் பிரச்னையையும் கையில் எடுத்துக் கொண்டிருக்கும் அநாகரிகம் இன்று தமிழ்நாட்டில் அரங்கேறியிருக்கிறது.
இப்படி போகாதீர்கள் என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றனர். ஆனால் எதைப் பற்றியும் க்ண்டு கொள்ளாமல் கவர்னர் இப்படி இறங்கியிருப்பதன் மூலம், மாநில சுயாட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருக்கிறது.
தில்லியில் எம்.ஜி.ஆர். காலம், அம்மாவின் காலம், கலைஞரின் காலம் என எல்லாக் காலத்திலும் தமிழ்நாடு ஹவுஸ், கேரளா ஹவுஸ், ஒரிசா ஹவுஸ் என்று இருப்பது மாதிரி.. தில்லியில் தமிழ்நாடு ஹவுஸ்.
ஆனால் தமிழ்நாடு என்று சொன்னாலே பிஜேபிக்கு எரிச்சலும் நமைச்சலும் வருகிறது. அதனால் அந்த தமிழ்நாடு என்ற பெயரை எடுங்கள் என்று எஜமானர்கள் உத்தரவிட்டதால், அந்தப் பெயரை வைகைத் தமிழ் இல்லம், பொதிகைத் தமிழ் இல்லம் என்று பெயரைக் கூட மாற்றியிருக்கிறார்கள். ஒரு பெயரை வைப்பதற்காகவே போராட்டத்தைச் சந்தித்த மாநிலம் தமிழ்நாடு. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
மீண்டும் அப்படி ஒரு போராட்டத்துக்கு தமிழக மக்களை தூண்டி விடுகிற அளவுக்கு மொழியின் மீது ஒரு அத்துமீறல், கலாசாரத்தின் மீது ஒரு அத்துமீறல் என தில்லி ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டு வர முடியாமல் மாநில அரசு விழி பிதுங்கிக் கிடக்கிறது. ஆகவே இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட டிடிவி தினகரன் தொடங்கியிருக்கும் பயணம் மக்களின் ஆதரவுடன் அமோகமாக நடந்துவருகிறது…. என்றார் சம்பத்.
அப்போது குறுக்கிட்ட நிருபர், அண்மைக் காலத்தில் கோவையில் கவர்னரின் சுற்றுப்பயணத்தால்தான் இந்த மாபெரும் ஊழல் வெளிவந்து, துணை வேந்தர் சிக்கியிருக்கிறார் என்கிறார்களே! ஆனால் நீங்கள் கவர்னரின் ஆய்வை குறை கூறுகிறீர்களே என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், அவரின் சுற்றுப் பயணத்தால்தான் இந்த ஊழல் வெளிவந்தது என்பது தவறான தகவல். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள் எல்லோருமே ஊழல்வாதிகள்தான். அவர்கள் எண்ணமுடியாத கோடிகளைக் கொடுத்துதான் பதவிக்கு வந்திருக்கிறார்கள்.
அதில் அவர் இந்தப் பொறியில் சிக்கியிருக்கிறார். எல்லா துணைவேந்தர்களும் சிக்குகிற நாள் வெகு தொலைவில் இல்லை. இதில் அமைச்சர்களும் இருக்கிறார்கள்
உயர்கல்வித் துறை அமைச்சரும் இதில் உடந்தை. எனவே, இது குறித்து சிபிஐ விசாரணை கண்டிப்பாக வேண்டும். குற்றவாளி களை கூண்டில் நிறுத்த வேண்டும். நியாயமானவர்கள் பதவிகளில் நியமிக்கப் பட வேண்டும். உயர் கல்வித் துறையில் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கம் போக்கப் படவேண்டும்.,
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு குட்டிச் சுவராகியுள்ளது. இன்று ராமேஸ்வரத்தில் போலீஸ்காரரே சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். ராஜஸ்தான் கொள்ளையரைப் பிடிக்கப் போய் சக போலீஸ்காரராலேயே பெரிய பாண்டியன் என்ற ஆய்வாளர் சுட்டுக் கொல்லப் பட்டு அவர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுத்திருக்கிறது அரசு.
பஸ் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்களைக் கைது செய்து தமிழக அரசு தவறு செய்துள்ளது. கைது செய்யப் பட்ட மாணவர்களை உடனே விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 60களில் நடந்தது போல், அண்மையில் நடந்த போராட்டம் போல், மீண்டும் ஒரு மெரினா புரட்சி வெடிக்கும்.
தினகரனுக்குப் போட்டியாக இன்று பாஸ்கரன் அரசியல் களம் காண்பது குறித்துப் பேசியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, பாஸ்கரன் போன்றவர்களின் வாக்குமூலத்தை என்னைப் போன்றவர்கள் ஜீரணிக்க முடியவில்லை. என்று கூறினார் நாஞ்சில் சம்பத்.
மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் நாங்கள் ஆட்சியில் இருந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற இயலாத பட்சத்தில், மாணவர்களைக் காப்பி அடிக்க அனுமதிப்போம் என்று பேசியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, கே.என். நேரு பொது வெளியில் அப்படி பேசியிருக்கக் கூடாது. இந்தியன் ரயில்வேயில் இருந்து எல்லாத் துறையிலும் வடநாட்டுக் காரர்கள் சப்தமில்லாமல் இறங்கியிருக்கிறார்கள்.
பிரச்னை இருக்கிறது. நேருவின் கோபம் நியாயமானது. ஆனால், அதற்காக அவர் வைத்திருக்கும் தீர்வு சரியானது அல்ல என்று கூறினார் நாஞ்சில் சம்பத்.
நாஞ்சில் சம்பத்தின் செய்தியாளர் சந்திப்பு காணொளி:
[su_youtube url=”https://www.youtube.com/watch?v=yhc4mRmN7t4″ width=”640″ autoplay=”yes”]