மதுரை: மதுரையில் கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அலுவலகத்தின் முன்பு வாடகை செலுத்த கெடு விதித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின்கீழ் மகளிருக்கான பூமாலை வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கே மொத்தம் 32 கடைகள் உள்ளன. இந்த வளாகப் பராமரிப்புப் பணிகளை அவ்வப்போது ஒவ்வொரு துறையினரிடமும் மாற்றிக் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது 2014–ம் ஆண்டு முதல் அந்த வணிக வளாகப் பராமரிப்புப் பணிகள், விக்கிரமங்கலம் ஊராட்சி கூட்டமைப்பின் கீழ் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் வாடகைக்கு இருப்பவர்கள் ஒரு வருடமாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் வாடகை மற்றும் மின்கட்டணத்தை 15 நாட்களுக்குள் செலுத்தும்படி அவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அந்த வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த வளாகத்தின் எண் 12 முதல் 14 வரை உள்ள அறைகளில் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் விசாரணை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கும் வாடகை வசூல் குறித்த நோட்டீசு ஒட்டப்பட்டுள்ளது. இந்தத் தகவல் மின்னல் வேகத்தில் பரவியதை அடுத்து, அந்த நோட்டீஸ் பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்டது.
வாடகை செலுத்த கிரானைட் முறைகேடு விசாரணை அதிகாரி சகாயம் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
Popular Categories


