திருச்சி திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விமான நிலைய டெர்மினல் பகுதி மேலாளர் லூக்காஸ் டேவிட்டின் செல்போனுக்கு வந்த ஒரு அழைப்பில், எதிர்முனையில் பேசிய வாலிபர், விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளோம். சரியாக இன்று காலை 8 மணிக்கு அது வெடிக்கும் என கூறியுள்ளார். அதிகாலை 4.55 மணிக்கு வந்த இந்த தகவலால் டெர்மினல் மேலாளர் டேவிட் லூக்காஸ் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருச்சி மாநகர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். விமான நிலைய காவல் அதிகாரிகள் உடனடியாக விமான நிலையத்துக்கு விரைந்து சென்றனர். மோப்ப நாயும் கொண்டுவரப்பட்டது. 3 மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது. அதன் பிறகு போலீசாரும், பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் திருச்சி விமான நிலையத்தில் இன்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த செல்போன் எண் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, கீழவாடி தெருவை சேர்ந்த முகமது ஹூசேன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருக்காட்டுப்பள்ளி விரைந்தனர்.

