சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தவர் வீட்டில் 15 சவரன் நகை கொள்ளை போனது. சென்னை கே.கே. நகர் நடேசன் தெருவைச் சேர்ந்தவர் -ஸ்ரீவத்சவன். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்புறக் கதவு திறக்கப்பட்டு இருந்ததை அவர் கவனிக்கவில்லை. போட்டி முடிந்த பின்னர் தான் கதவு திறந்து கிடப்பதைக் கண்டுள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த பீரோவும் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகுதான் அவருக்கு வீட்டில் நகைகள் கொள்ளை போனது தெரியவந்திருக்கிறது. வீட்டின் முன்பக்க அறையில் ஸ்ரீவத்சன் மெய்மறந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசில் ஸ்ரீவத்சன் புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
கிரிக்கெட்டில் முழு கவனம்: வீட்டில் போனது களவு!
Published:

