சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நிலையில், கடந்த ஞாயிறு நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது, பீர் விற்பனை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் வீட்டில் இருந்து கொண்டு கிரிக்கெட் போட்டிகளை ரசிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும், நண்பர்களோடு பார்களில் பீர் பாட்டிலுடனும் நொறுக்குத் தீனியுடன்தான் போட்டியை பார்க்க விரும்புகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதனால் போட்டி நடைபெறும் நாட்களில் காலையிலேயே பார்களுக்குச் சென்று விடுகின்றனர் என்கின்றனர். இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது ஞாயிற்றுக் கிழமை என்பதால், விடுமுறை தினமான அன்று, காலை முதலே மதுக்கூடங்களில் அதிகளவில் கூட்டம் குவியத் தொடங்கியது. சென்னை, கோவை, சேலம், மதுரை உள்பட, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பெரும்பாலான பார்கள் காலை 11 மணி அளவிலேயே நிரம்பிவிட்டது. காலையிலேயே பார்களுக்கு வரும் ரசிகர்கள் மாலை போட்டி முடிந்த பின்னர்தான் வெளியே சென்றனர். இத்தகைய சூழ்நிலையில், அடுத்து வரும் இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் போட்டியும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அந்த நாளிலும் இந்த நிலை இருக்கும் என்கின்றனர் பார் உரிமையாளர்கள்.
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய – பாகிஸ்தான் போட்டி நாளில் மது விற்பனை அதிகரிப்பு
Popular Categories


