குடிநீர் குழாய் கசிவை சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த இளைஞர் பலி..

Published:

IMG 20230102 WA0101 - 2026
IMG 20230102 WA0102 - 2026
பொன் இருளப்பன்

ராஜபாளையத்தில் குடிநீர் குழாய் கசிவை சரி செய்ய தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து 30 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவிநாதபுரத்தை சேர்ந்தவர் பொன்இருளப்பன். 30 வயதான இவர் தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில், மனைவி சபரீஸ்வரியுடன் ஶ்ரீரெங்க பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

பொன் இருளப்பன் நகருக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் டிபி மில்ஸ் சாலையில் சென்றுள்ளார். சாலையின் நடுவே தாமிரபரணி குடிநீர் குழாயில் இருந்த கசிவை நீக்குவதற்காக 10 அடி ஆழத்தில் பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

இருட்டில் சென்ற பொன் இருளப்பன் சாலையின் நடுவே இருந்த அந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்துடன் விழுந்துள்ளார். இரவில் ஆள் நடமாட்டம் இல்லாததால் இவர் விழுந்தது வெளியே தெரியவில்லை. வீடு திரும்பாத அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அந்த வழியாக சென்ற பொது மக்கள் குழிக்குள் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அவர்கள் வந்து பார்த்த போது இறந்து கிடந்தது பொன் இருளப்பன் என்பது தெரிய வந்தது.

உறவினர்களுக்கு தகவல் அளித்த காவல் துறையினர் பொன் இருளப்பன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலையில் பெரிய அளவிலான குழி இருப்பது குறித்து முறையான அறிவிப்பு பலகை ஏதும் இல்லாததே இன்றைய விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. குழியை சுற்றி சிறிய அளவிலான டேப் மட்டும் சுற்றி வைக்கப்பட்டிருந்தது.

இந்த அலட்சியப் போக்கினாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டப்படும் குழிகளை சுற்றி தடுப்பு பலகை அமைத்து, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img