
ராஜபாளையம் அருகே வேளாண்மை துறை சார்பில் மானிய விலையில் தென்னங்கன்றுகள் மற்றும் பண்ணைக் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங் கொண்டான் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் சார்பில் கிராமத்திற்கு 600 என 12 கிராமங்களுக்கு ரூ. 4.32 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 7,200 தென்னை மரக் கன்றுகள் முழு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
மேலும் இந்த 12 கிராமங்களை சேர்ந்த 460 சிறு குறு விவசாயிகளுக்கு மாநில வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கடப்பாரை, மண் வெட்டி, கதிர் அறுக்கும் அரிவாள் உள்ளிட்ட பண்ணைக் கருவிகள் ரூ. 6.74 லட்சம் மதிப்பீட்டில் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் 12 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், பயிர்களில் உண்டாகும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழி முறைகள் குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் தொடக்க நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
இது குறித்து ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் க .திருமலைச்சாமி வேளாண்மை அலுவலர் தனலட்சுமி தெரிவித்ததாவது,
ராஜபாளையம் வட்டாரத்தில் அயன் கொல்லமங் கொண்டான், நக்கனேரி, மேலூர் துரைசாமிபுரம், சொக்கநாதன் புத்தூர் வடக்கு தேவதானம், மீனாட்சிபுரம், சோலைசேரி, குறிச்சியார்பட்டி, சோழபுரம், மற்றும் மேலராஜகுலராமன் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் (2022-23)
தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் விதம் 300 குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் முழு மானிய விலையில் ஒவ்வொரு கிராமத்திலும் வழங்கப்பட உள்ளது. மேலும் மாநில வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிறுகுறு விவசாயிகளுக்கு பண்ணைக்கு தேவையான கருவிகள் 1.கடப்பாரை 2.மண்வெட்டி கை களைக்கொத்தி,கதிர் அறுக்கும்அரிவாள்,இரும்பு சட்டி போன்ற கருவிகள் 50% மானியத்தில் 460 சிறுகுறு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறினர்.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் அவர்கள் தலைமையில் அயன் கொல்லாங் கொண்டான் கிராமத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் அவர்கள் தென்னங்கன்றுகள் மற்றும் பண்ணைக்கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கியும் விவசாயிகளுக்கு தமிழக அரசு செய்து வரும் பல்வேறு திட்டங்களை குறித்து எடுத்துக் கூறினார்கள் . மேலும் இந்நிகழ்ச்சியில் இராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் க .திருமலைச்சாமி வேளாண்மை அலுவலர் தனலட்சுமி துணை வேளாண்மை அலுவலர் மோகன் தாரியா பட்ஜக் உதவி வேளாண்மை அலுவலர் திரு சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு தென்னை கன்றுகள் மற்றும் பண்ணைக்கருவிகளை பெற்று பயனடைந்தனர்.பின்னர் வேளாண்மை துறையில் பதிவு செய்த விவசாயிகளுக்கு தென்னங் கன்றுகள் மற்றும் பண்ணை கருவிகளை ராஜபாளையம் வேளாண்மை கோட்டத்துடன் இணைந்து எம்எல்ஏ தங்கப்பாண்டியன் வழங்கினார்.இந்நிகழ்வில் பேசிய எம்எல்ஏ தங்கபாண்டியன் விவசாயிகளின் நலன்காக்கும் அரசு நமது தமிழக அரசு அதனால்தான் நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விவசாயத்திற்கென தனி பட்ஜெட்யை நடைமுறை படுத்திவருகிறார் எனக்கூறினார் மேலும் ராஜபாளையம் தொகுதியில் கடந்த ஆட்சியில் 2 நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டது தற்போது 7 இடங்களில் செயல்படுகிறது எனவும் அயன்கொல்லங்கொண்டான் பகுதி விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வரும் மாதத்திலேயே இப்பகுதிகளிலும் புதியதாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் எனக் கூறினார்.




