தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சி நகரச் செயலாளர் பாஸ்கர்(28) கடந்த 22–ந்தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக் குளத் தெருவை சேர்ந்த கணேசன், விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்றிரவு சேதுராமன் மகன் பாதாளம் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பாஸ்கர் படுகொலையைக் கண்டித்தும், முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் ஆழ்வார்திருநகரியில் நேற்று விடுதலைச் சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து விடுதலைச் சிறுத்தை கட்சியினர் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும், இதே போல் மள்ளர் கழகத்தினரும் தென்திருப்பேரை பஸ் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர். இதனிடையே ஆழ்வார்திருநகரியில் இருந்து காடுவெட்டி வழியாக ஆயத்தூர் செல்லும் சாலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் முட்செடிகளை வைத்து சாலையை மறித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் விரைந்து சென்று முட்செடிகளை அகற்றினர். இதனால், நேற்றிரவு ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வல்லநாடு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பாஸ்கரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 4–வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

