திருச்சி: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்த மர்ம கடிதத்தில், ‘3-3-2015-க்குள் காவிரி ரயில் பாலத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கும். திருச்சி புத்துரில் கடை நடத்தும் முருகன் ரூ.7 லட்சம் தர வேண்டும். இல்லையெனில் ரிமோட் மூலம் குண்டு வெடிக்கச் செய்யப்படும். கே.தியாகராஜன், தனபால் போட்டோ கடை, ராகவேந்திரபுரம் ஆர்ச், ஸ்ரீரங்கம்’ என்று எழுதப்பட்டு இருந்தது. தகவல் கிடைத்ததும் போலீசார், மோப்ப நாயுடன் சென்று காவிரி ரயில் பாலத்தை சோதனை செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி அரியலூர் மாவட்ட ரயில் நிலையங்களுக்கு அடிக்கடி இவ்வாறு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் அரியலூர் மருதை ஆற்று பாலத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம் வந்தது. இதே போன்று அதற்கு முன்பும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மிரட்டல் கடிதம் அனுப்பியவர் வீடியோ, போட்டோ கடை சங்கம் பெயரில் எழுதி கடிதம் அனுப்பி உள்ளார். அவர் யார்? என்று விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. மேலும், வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சியில் கடந்த சில மாதங்களாக வந்த 8–வது மிரட்டல் கடிதம் இது. திருச்சி அரசு மருத்துவமனை, சத்திரம் பஸ் நிலையம் டெய்லர் கடை, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், ஸ்ரீரங்கம், மற்றும் லால்குடி ரெயில் நிலையங்கள், அரியலூர் கள்ளக்குடி, பழங்காநத்தம், ஆகிய ரயில் நிலையங்களுக்கும் மிரட்டல் கடிதம் ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தது. அனைத்து கடிதங்களும் தியாகராஜன் என்ற பெயரில் போட்டோ கிராபர் சங்கம் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பி வருகிறார். அதில் உள்ள கையெழுத்துகளும் ஒரே மாதிரியாக உள்ளன. மிரட்டல் கடிதம் அனுப்பி வரும் வாலிபர் மன நோயாளியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சிலரால் பாதிக்கப்பட்ட அவர் அவர்களை பழி வாங்க சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களில் மிரட்டல் கடிதம் அனுப்பி வரலாம் என கூறப்படுகிறது.

