தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் ரூ.100 கோடி மதிப்பிலான 2 பஞ்சலோக சிலைகள் கொள்ளை போனதும் சிலைகள் பல காணாமல் போயுள்ளதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் தமிழக பாரம்பரிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. உலக பாரம்பரிய சின்னமாகத் திகழும் இதனை மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டியுள்ளான். தற்போது இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப் படும் இந்தக் கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.
இந்தக் கோவிலுக்கு 13 பஞ்ச லோக சிலைகளை பொய்கை நாட்டைச் சேர்ந்த தென்னவன் மூவேந்த வேளாண் வழங்கியுள்ளார். இவை அனைத்தும் கோவிலில் உள்ள சிலைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இதில் 75 செ.மீ. உயரம் உடைய ராஜராஜ சோழன் சிலையும், 55 செ.மீ. உயரமுள்ள பட்டத்து இளவரசி லோகமாதேவியார் சிலையும் சிறப்பானவை. இந்த இரு சிலைகளும் காணாமல் போயுள்ளதாக முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கட்ராமன் விசாரித்ததில் அது உண்மை என தெரிய வந்தது. இது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிராமலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த 2 பஞ்சலோக சிலைகளும் ரூ.100 கோடி மதிப்புடையவை என்று கூறப் படுகிறது.
இதனிடையே, சிலைகள் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இந்த வழக்கு, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. அதை அடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாராமன், அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கட்ராமன் ஆகியோர் தஞ்சைக்கு வந்து இது குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கொள்ளை போன சிலைகள் குறித்த ஆதாரங்கள் உள்ளன. அந்தச் சிலைகள் தற்போது குஜராத்தில் உள்ள கௌதம் சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அவற்றை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
மேலும் இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, பெரிய கோவிலில் உள்ள சிலைகள் காப்பகத்தில் இருந்த மேலும் பல சிலைகள் மாயமானது தெரிய வந்துள்ளது.