சென்னை: வெள்ளிக்கிழமை இன்று தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான ஒரு சூழ்நிலையே நிலவியது. கொறடா உத்தரவுக்கு மாறாக, எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கு கோரியபோது எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ்., உள்ளிட்ட்ட 11 பேரை தக்தி நீக்கக் கோரும் வழக்கில், அவைத்தலைவர் என்ன முடிவு செய்தாரோ அதுவே சரி என்று கூறி, அவைத்தலைவர் முடிவில் தாங்கள் தலையிட முடியாது என்ற ஒரு வார்த்தையை தங்கள் தீர்ப்பில் அடிக்கோடிட்டு வழங்கியிருக்கின்றனர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்.
இந்நிலையில், தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கப்பட்ட வழக்கிலும் இது போன்ற ஒரு நிலைதான் இருக்கும் என்று இப்போதே பலரும் எதிர்பார்க்கின்றனர். காரணம், அதிலும் அவைத்தலைவர் தனபால்தான் இத்தகைய ஒரு முடிவை எடுத்தார். வழக்கு பதியப் பட்டதும், சட்டப் பேரவைத் தலைவர் தனபால் நடவடிக்கையை எதிர்த்துதான் என்பதால், இந்த வழக்கில் இப்போதே சில முடிவுகள் தெரியவருவதாக அதிமுக., தரப்பில் கூறுகின்றனர்.
தினகரன் தரப்பு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்திலும் தீர்ப்பு எப்படி இருக்கும் என தெளிவு, இன்றைய 11 பேர் விவகாரத்தில் புரிவதால் தினகரன் தரப்பில் பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப் படுகிறது. இதுவரையிலும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்று நம்பிக் கொண்டிருந்த தினகரன் தரப்புக்கு, இன்று வந்த தீர்ப்பு சற்று கிலியைத்தான் கொடுத்திருக்கும்.
11 சட்ட மன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து இன்று காலை முதல் தமிழகத்தில் பரபரப்பு நிலவியது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதுபோல், இத்தனை காலம் நீடித்து வரும் ஒரு பரபரப்புக்கும் நாளை முற்றுப் புள்ளி வைக்கப் படும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு சனிக்கிழமை வரும் என்று கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்துக்கு எதிராக தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்தனர்.
இந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த மனு பரிசீலிக்கப் படவில்லை. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் களாக நீடிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
சபாநாயகரின் நிர்வாக முடிவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்பில், இந்த வாசகம்தான் முக்கியமானதாகக் கருதப் படுகிறது.
முன்னதாக, இன்று தேவராஜன் என்பவர், 18 பேர் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் தீர்ப்பு கொடுத்திவிட்டு 11 பேர் வழக்கில் தீர்ப்பு கொடுக்கலாமென்று கூறினார். அவரது பேச்சில் கோபமுற்ற நீதிபதிகள், அவரை நீதிமன்றத்தை விட்டு வெளியேற வைத்தனர். அப்போது, இரு வழக்குகளும் வேறுவேறு பெஞ்ச் என்பதால், வேறு தன்மை கொண்டது என்பதால், அதில் தாங்கள் தலையிட முடியாது என்று கூறினர். எனவே, 18 பேர் குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வரலாம் என்று தினகரன் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.




