மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வருகிறார். குவாரிகளுக்கு அவர் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட போது குவாரி அதிபர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவரிடம் புகார் மனுக்களை அளித்தனர். அதன்படி மதுரை கிழக்கு தாலுகா, ஜாங்கிட்நகர், திருமோகூர், ராஜாக்கூர் ஆகிய பகுதி மக்கள் அளித்த கிரானைட் புகார் மனு குறித்து விசாரிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரிடம் ஐஏஎஸ்அதிகாரி சகாயம்தெரிவித்தார். அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஒத்தக்கடை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாள் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் கிரானைட் முறைகேட்டில் பி.ஆர்.பி. நிறுவனம் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பி.ஆர்.பி. நிறுவனம் மீது ஒத்தக்கடை போலீசார் மேலும் 6 வழக்குகளை இன்று பதிவு செய்துள்ளனர். கிரானைட் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே பி.ஆர்.பி .நிறுவனம் மீது 100–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை பி.ஆர்.பி. நிறுவனம் மீது மேலும் 6 வழக்கு பதிவு: சகாயம் அதிரடி
Published:

