பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு என்பது நள்ளிரவு 11.59க்குப் பின் 12 மணி அளவில், 00.01 என கடிகாரத்தில் துவங்கும் நேரத்தில் கணக்கிடப் பட்டு கொண்டாடப் படுகிறது. எனவே, அந்த நேரத்தில் உற்சாகமாக இருந்தால் வருடம் முழுதும் உற்சாகமாக இருக்கலாம் என்ற நம்பிக்கை பெரும்பாலானோருக்கு உள்ளது. அதனால், அந்த நேரத்தில் குடித்துவிட்டு, சாலைகளில் கத்திக் கொண்டு, கும்மாளம் போடுவது இளைஞர்கள் பலரின் வழக்கம்.
ஆனால், இப்படிச் செய்வதால், கூடவே சிக்கலையும் வாங்கிக் கொண்டு வருவோம் என்பதை நினைவூட்டி எச்சரிக்கின்றனர் போலீஸார்.
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தின்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்தால் பாஸ்போர்ட் சரிபார்ப்பின் போது சிரமம் ஏற்படும் என்றும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில், கிண்டி. அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் பகுதிகளில் பைக் ரேஸ் தடுப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளதாகவும், மெரினா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு கள் செய்யப் பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வழக்கம் போல், கடற்கரையோரங்களில் குதிரைப்படைகள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.