பொங்கல் விழா நடந்து முடிந்த நிலையில், நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகரில் கிறிஸ்துவ மத பிரசாரத்துக்காக வந்தவர்களை உள்ளூர் இந்து முன்னணியினர் பிடித்து போலீஸார் வசம் ஒப்படைத்தனர்.
ஜன.19 சனிக்கிழமை அன்று காலை செங்கோட்டை நகரில் திடீரென சில கிறிஸ்துவ பிரசாரகர்கள் நடமாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் மக்கள். செங்கோட்டை வம்பளந்தான் முக்கு பகுதியிலும், மேல பஜார் பகுதியிலும் கிறிஸ்துவ பிரசாரம் செய்து வந்ததைக் கண்டும், அவர்கள் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்ததைக் கண்டும் கோபம் அடைந்த இந்துக்கள் சிலர் இது குறித்து இந்து முன்னணியினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதை அடுத்து களத்தில் இறங்கிய இந்து முன்னணியை சேர்ந்த நாணய கணேசன் உள்ளிட்ட சிலர், பிரசாரம் செய்து வந்தவர்களை தடுத்து நிறுத்தி, விசாரித்தனர்.
அவர்கள், கன்னியாகுமரியில் இருந்து வந்த கிறிஸ்தவ மதமாற்றுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதை அடுத்து, செங்கோட்டை வம்பளந்தான் முக்கில் வைத்து இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதிய ஜனதா மற்றும் இந்து மக்கள் ஒன்று திரண்டு, அவர்களை மேலே செல்லவிடாமல் தடுத்தனர்.
தொடர்ந்து காவல் துறையினருக்கு போன் செய்து, வரவழைத்தனர். காவல் துறையினர் அவர்களிடம், ஏற்கெனவே செங்கோட்டை நகர் இருவேறு மதப் பிரச்னையில் இருந்து, இப்போதுதான் சரியாகியிருக்கிறது. இதில் நீங்கள் வேறு மேலும் பிரச்னையைக் கிளப்ப வந்துவிட்டீர்களா என்று கூறி அவர்கள் எப்படி இங்கே வந்தார்கள் என்று விசாரித்தனர்.
அப்போது, தாங்கள் செங்கோட்டையைச் சேர்ந்த இருவரின் அழைப்பின் பேரில்தான் வந்ததாகக் கூறவே, அவர்கள் குறிப்பிட்ட செங்கோட்டையைச் சேர்ந்த இருவரைப் பிடித்து விசாரித்த போலீஸார், அவர்கள் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.