ராமநாதபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணியைச் சேர்ந்த முனியசாமியின் நினைவு மண்டப திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் மீது போலீஸார் கண்மூடித்தனமாகத் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பழனிவேல்சாமி மற்றும் நிர்வாகிகள் மீது ராமநாதபுரம் காவல்துறை ஏடிஎஸ்பி வெள்ளத்துரை அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகக் கூறப் படுகிறது. தொடர்ந்து இந்து முன்னணி பொறுப்பாளர்களைக் கைது செய்துள்ளது காவல்துறை.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தைக் கண்டித்து இன்று மாலை 5 மணிக்கு சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மேற்கு மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள், இந்து முன்னணியினர் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரத்தில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தாக்கப் பட்டதைக் கண்டித்து திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது போல் தமிழகம் முழுதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.