தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ரூ.133 கோடி மதிப்பில் 500 புதிய பேருந்துகளின் சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி! பின்னர் அவர் பேருந்தில் ஏறி வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம், சேலம், கும்பகோணம் மற்றும் சென்னை கோட்டங்களில் இயக்கப்படவுள்ள இந்த புதிய பேருந்துகளில், நகரும் வசதியுள்ள இருக்கைகள் மற்றும் அனைத்து இருக்கைகளிலும் செல்போன் சார்ஜிங் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
ஏசி வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தப் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து வேலூர், திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன.
இந்தப் பேருந்துகளின் நவீன வசதிகள் குறித்து பலரும் பேசினாலும், வழக்கம் போல் மதுரை, நெல்லை உள்ளிட்ட தென்மண்டல பேருந்து கோட்டங்களுக்கு அதே பழைய டப்பாக்கள் தான் என்று தங்கள் வருத்தத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்கின்றனர்!