தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை ஆதரித்து திறந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், சூரங்குடி, வேம்பார் பகுதிகளில் திறந்த வேனில் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் கட்டுக்கடந்தாக மக்கள் வெள்ளம் காணப்பட்டது. சாலையின் நடுவே திறந்த வேனில் பிரசாரம் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மேலும், தூத்துக்குடி பாஜக, வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் தகுதி வாய்ந்தவர் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும். நமது கூட்டணியை பார்த்து மிரண்டுபோய் என்ன பேசுவது என தெரியாமல் ஸ்டாலின் உள்ளார்.
40 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். சில துரோகிகள் செய்த சதி காரணமாக 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிறது. இடைத்தேரதல் மூலம் சதிகாரர்களை வீழ்த்தி நாம் வெற்றி பெற வேண்டும்.
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றுவதால் மக்கள் ஆதரவு தருகிறார்கள். ஏழைகளுக்கான திட்டங்களை தடுக்கும் கட்சி திமுக. தேர்தல் முடிந்த உடன் ரூ.2 ஆயிரம் நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படும்.
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு திமுக.,தான் அனுமதி வழங்கியது. திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியிருக்கலாம். இந்த விவகாரத்தில் திமுக நாடகம் போட்டு, மக்களை ஏமாற்றுகிறது. அதிமுக அரசு தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது. ஓட்டுக்காக , திமுக பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது.
கனிமொழியை வீழ்த்தும் சக்தி தமிழிசைக்கு மட்டுமே உண்டு என்று அவர் பேசினார்.