சென்னை: அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால், மன உளைச்சல் தாளாமல், சென்னை வண்ணாரப்பேட்டையில் நியாயவிலைக் கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் கூறியது…. சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் மாடர்ன் லைன் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த வே.இளங்கோவன்(50) எர்ணாவூர் ஜெ.ஜெ.நகரில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் எடையாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இளங்கோவன் வியாழக்கிழமை திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர். அப்போது இளங்கோவன் எழுதியதாக ஒரு கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில் சில தகவல்கள் தெரியவந்ததாக் போலீஸார் கூறினர். சில நாட்களுக்கு முன் இளங்கோவன் பணிபுரியும் கடையில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியபோது, அங்கே பொருள்களின் இருப்பு குறைவாக இருப்பதும், பொருள்கள் வாங்க வந்த பலருக்கு இளங்கோவன் ரசீது வழங்காமல் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இளங்கோவன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே அதிகமாக மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்த இளங்கோவன் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி, குழந்தைகளைப் பிரிந்து தனது தம்பி கௌதமனோடு வசித்து வந்தார். இந்நிலையில் மன அழுத்தம் தாளாமல் இளங்கோவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளங்கோவன் எழுதியதாகக் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையைத் தொடர்ந்து, அவர்கள் கொடுத்த நெருக்கடியால் மன உளைச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இளங்கோவனை பணியிடைநீக்கம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நியாய விலைக் கடை ஊழியர்கள் வெள்ளிக்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

