சென்னை: மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் 5 முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து இன்று காலை விஜயகாந்த் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, பிரதமரைச் சந்தித்து நடவடிக்கை கோரப் போவதாக அவர் கூறினார். அந்த சந்திப்பில் ஸ்டாலினும் இருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், மேகதாது அணை தொடர்பாக பிரதமரை சந்திக்க செல்லும் விஜயகாந்துடன், கனிமொழி- திருச்சி சிவா ஆகியோர் தி.மு.க, சார்பில் செல்வர் என தெரிவித்தார். மேலும் இந்த பிரச்னையை எடுத்துச் செல்ல வேண்டிய தமிழக அரசு செயலற்றுப் போனது. இதனால் விஜயகாந்தின் இந்த முயற்சியை கருணாநிதி பாராட்டினார் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

