மணல் அள்ளத் தோண்டிய 25 அடி ஆழ குழியில் மண் சரிந்து தொழிலாளி பலி

Published:

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மணல் அள்ளுவதற்காகத் தோண்டிய 25 அடி ஆழ குழியில் தொழிலாளி இறங்கியபோது, மண் சரிந்து விழுந்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி அருகே படேதலாவ் ஏரியில் 25 அடி ஆழத்துக்குக் கீழே மணலை திருட்டுத்தனமாக எடுக்கும் வேலையில் மாலகுப்பம், கரடிகுறி, பூசாரிப்பட்டி, கல்லுகுறி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே கரடிகுறி அருகிலுள்ள மாலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி (45) நேற்று காலை மணல் எடுக்கும் வேலையில் ஈடுபட்டார். இதற்காக அங்கே தோண்டப்பட்டிருந்த 25 அடி ஆழ குழியில் கயிறு கட்டி உள்ளே இறங்கினார். குழிக்கு மேலே மணற்பரப்பில் 2 பேர் அவர் எடுத்துக் கொடுக்கும் மணலை வாங்குவதற்காக தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில் திடீரென, அந்தக் குழியின் பக்கவாட்டில் உள்ள மண் முழுதாகச் சரிந்து குழிக்குள் விழுந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத ராமசாமி அலறினார். ஆனால் அதற்குள் அவர் மண்ணில் புதைந்து மூச்சுத் திணறி உயிரிழந்தார். இதைக் கண்டு மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, மகராஜகடை காவல் நிலையத்துக்கு தொழிலாளர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸார் அங்கு விரைந்து வந்து, பொக் லைன் இயந்திரம் மூலம், குழிக்குள் மூடிக்கிடந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர், மண்ணுக்குள் புதைந்து கிடந்த ராமசாமியின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மகராஜ கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img