நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் பிளாட்பாரம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. யாரும் காயம் அடையவில்லை. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் மொத்தம் 4 பிளாட்பாரங்கள் உள்ளன. அதில் 1ஏ பிளாட்பாரத்தில் திருவனந்தபுரம் அல்லது அந்த வழியாகச் செல்லும் பயணிகள் ரயில்கள் நிற்கும். நேற்று மதியம் 12.30க்கு நாகர்கோவிலில் இருந்து கோட்டயம் செல்லும் பயணிகள் ரயில் 1ஏ பிளாட்பாரத்திற்கு வந்தது. தண்டவாளத்தின் கடைசிப் பகுதிக்கு முன்பு ரயிலை நிறுத்தி என்ஜினைக் கழற்றினர். அதை முன்பகுதியில் மாட்ட நகர்த்தப்பட்டபோது என்ஜின் வழக்கத்திற்கு மாறாக வேகமாகச் சென்று தண்டவாளத்தின் தடுப்புக் கட்டையைத் தாண்டி பிளாட்பாரத்தில் மோதியது. இதில் பிளாட்பாரத்தின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்தது. என்ஜின் மோதியபோது பிளாட்பாரத்தில் பயணிகள் யாரும் இல்லைஎன்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பிளாட்பாரம் மீது மோதியதில் என்ஜினின் ஒரு சக்கரத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அந்த என்ஜினை நகற்றிவிட்டு கோட்டயம் செல்ல இருந்த ரயிலில் வேறு என்ஜினைப் பொருத்தினர். ஏற்கெனவே இது போல் அண்மைக் காலத்தில் 3 முறை நிகழ்ந்திருக்கிறது.

