உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி குமரி மாவட்டத்திலும் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் பல மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டன.
குமரி மாவட்டத்தில் தற்போது 95 டாஸ்மாக் கடைகள் மட்டுமே உள்ளன. இதனால் திறந்திருக்கும் மதுக் கடைகளில் மது வகைகளை வாங்க ‘குடி’மகன்கள் முண்டியடித்து வருகின்றனர். பல நேரங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் 108, 106 என சதத்தை தாண்டி விளாசி வருகிறது.
குமரி மாவட்டத்திலும் 98 டிகிரியை எட்டி கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, மோர், குளிநீர் என நாடி செல்கின்றனர்.
இதை எல்லாம் விட்டு விட்டு ‘குடி’மகன்களோ சில்லென பீர் வகைகளை விரும்புகின்றனர். பொதுவாக ஹாட் மதுவகைகளை பயன்படுத்தும் ‘குடி’மகன்கள் கூட தற்போது பீர்களை அதிகம் வாங்கி குடிக்கின்றனர். இதனால் பீர் வகைகளின் தேவை அதிகரித் துள்ளது.
இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு டாஸ்மாக் கடைகள் பலவற்றில் கூல் பீர்களுக்கு ரூ.10 வரை அதிகம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், திறந்திருக்கும் ஒரு சில மதுக்கடைகளில் அதிகம் பேர் மொய்ப்பதால், ஒரு சில மணி நேரத்திலேயே அனைத்து பீர்களும் காலியாகி விடுகின்றன.
இது போல பீர்களை எடுத்து பிரிட்ஜ், பிரீஸர்களில் அடுக்கினாலும் அடுத்த சில மணி நேரத்துக்குள் அவை காலியாகி விடுகின்றன. மீண்டும் அவற்றை அடுக்கி வைத்து, உடனடியாக எடுத்து விற்பதால் பீர்க்கு சரியாக கூல் கிடைப்பதில்லை. இதனால் கூல் பீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழல்களால், கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமாக ஒரு கூல் பீர் அடிக்கலாம் என ஆவலுடன் வரும் ‘குடி’மகன்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. எனினும் கூல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; பீராவது கிடைத்ததே என குடிமகன்கள் வாங்கிச் செல்கின்றனர்.



