
நம் நாட்டு மக்களின் வாழ்வில் புராணங்களின் தாக்கம் ஆழமாக, பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளது. புராணம் வேத மாதாவைப் போற்றி வணங்கி, “வேத தர்மமே சாஸ்வதம்!” என்று போதிக்கிறது.
விதை இன்றி விருட்சம் இல்லை. வேதம் என்ற விதையே புராணம் என்ற விருட்சமாக வெளிப்பட்டுள்ளது. மக்களுக்கு உபயோகப்படும் விருட்சத்தைப் போல புராணம் சாமானியர்களை ஊக்குவித்து, போதித்து அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.
சனாதன தர்மம் என்ற மாளிகைக்கு வேதம் அஸ்திவாரம் என்றால் புராணங்கள் ஆதாரத் தூண்களாக விளங்குகின்றன. புராணங்கள் இல்லாவிட்டால் சனாதன தர்மம் இத்தனை ஸ்திரமாக நிலைபெற்றிருக்காது.
முதன்முதலில் தோன்றிய “மக்கள் நூல்” புராணமே!
வேதங்களின் பொருள் பல ரகசியங்களுடன் ஆழத்துடனும் இருக்கும். அந்த வேத தர்மத்தை சரளமாக அழகிய போதனைகளாக சாமானியர்களுக்கு கூட கிடைக்கச் செய்ய வேண்டுமென்று வியாசர் கருதினார்.
மிகவும் எளிமையாக உள்ள சம்ஸ்கிருதமே புராணங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பேச்சு மொழி போல் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய, சிரமமற்ற சரள சமஸ்கிருதத்தை புராணங்கள் எழுதுவதில் உபயோகித்துள்ளார் வியாச பகவான்.
சுலபமான அனுஷ்டுப் சந்தஸ்ஸையே அதிகமாக உபயோகித்துள்ளார். வேதங்களில் உள்ள பல்முனைப்பட்ட ரகசியங்களை புராணங்களில் எளிமையாக விவரித்துள்ளார்.
“புராணம்” என்றால் பழமையானது என்ற பொருள் மட்டுமேயன்றி பழமையானாலும் என்றும் புதுமையானது என்ற பொருளும் தொனிக்கிறது. “புராபி நவம் புராணம்” – நித்திய நவீனமான தர்மமே பழங்காலத்து அம்சங்களை ஆதாரமாகக் கொண்டு கூறப்பட்டுள்ளது என்பது இதன் கருத்து.
புராணக் கதைகள் அனைத்து வித மக்களையும் கவர்ந்திழுக்கும் அம்சங்களோடு விளங்குகிறது. அவற்றின் கதாபாத்திரங்கள் விதவிதமான பாவனைகளுக்கு வடிவங்களாக பிரகாசித்து வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களால் ஒப்பிடப்படுகின்றன. அனேக பிரச்சினைகளுக்கு தீர்க்கும்வழி காட்டுகின்றன. இன்று வரையில் நாம் உதாரணங்களாக உபயோகிக்கும் பாத்திரங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் புராணங்களே ஆதாரம்.
புராண அறிவை வியாசரிடம் இருந்து பெற்று பின்னர் உபதேசித்தவர் சூதர். இவரையே ‘ரோம ஹர்ஷனர்’ என்பர். இந்த மிகச் சிறந்த வித்யைக்கு பிரசாரகர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவரான சூதமகா முனிவர். இவரே சௌனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தவர். இந்த அம்சம் ஒன்றே போதும் நம் சனாதன தர்மத்தில் குலத்தைவிட ஞானத்திற்கு முதலிடம் என்று நிரூபிப்பதற்கு.
புராணம் ஒரு பிரம்மாண்டமான படைப்பு. இத்தனை விஸ்தாரமான படைப்பு பிரபஞ்ச இலக்கியங்களில் காண்பதரிது.
18 என்ற எண்ணிக்கையாக விஸ்தரிக்கப்பட்ட புராண வித்யையை வியாச மகாமுனிவர் பதரிகாஸ்ரமத்தில் எழுதினார். விஷ்ணு சொரூபர்களான நர நாராயணர்களே அவருடைய குருமார்கள். எனவேதான் நர நாராயணர்களையும் வியாசரையும் சரஸ்வதியையும் வணங்கி நைமிசாரணியத்தில் சூதர் புராணக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
“நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம் I
தேவீம் சரஸ்வதீம் வ்யாசம் ததோ ஜய முதீரயேத் II”
‘ஜெயம்’ என்ற சொல்லுக்கு தர்மம் அர்த்தம் காமம் மோட்சம் என்ற சதுர்வித புருஷார்த்தங்களையும் அடைவது என்று பொருள். இந்த நான்கையும் அடைவதற்கான ஞானத்தை தரும் நூல் ஜெயம். எண் கணிதப்படி ஜெயம் என்ற சொல் 18 என்ற எண்ணைக் குறிக்கும். அஷ்டாதச புராண எண்ணிக்கை இந்த பிரார்த்தனை ஸ்லோகத்தில் பொதிந்துள்ளது.
கிராமங்களின் பொது மேடைகள், கோவில்களின் உற்சவப் பந்தல்கள் புராணக் கதைகளுக்கு மேடைகளாகி மக்களுக்கு தர்மத்தைப் பற்றிய எண்ணத்தையும் பகுத்தறியும் விவேகத்தையும் நீதியையும் பக்தியையும் போதித்தன. இன்றும் போதித்து வருகின்றன. எனவேதான் புராண அறிவலைகளின் விஸ்தீரணம் நாடோடிப் பாடல் இலக்கியங்களில் கூட உணர்ச்சிபூர்வமாக எதிரொலிக்கிறது.
புராணக் கதைகளில் பல யுகங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளையும், யக்ஞ சங்கேதங்களையும், மந்திர சாஸ்திர குறிப்புகளையும், யோக சாஸ்திர குறிப்புகளையும் காண முடிகிறது. சிறிது கூர்ந்து பரிசீலித்தால் இந்த குறிப்புகளை கிரகித்தறிய முடியும்.
சிருஷ்டியின் தொடக்கம் முதல் பிரளயம் வரை நடந்த வரலாற்றினை புராணங்கள் விவரிக்கின்றன. பல்வேறு மன்வந்தரங்களின் சரித்திரம், ராஜ வம்சங்களின் வரலாறு, பூகோள, வான சாஸ்திர, நட்சத்திர, கிரகங்களின் நிலைகள் – இவை புராணங்களில் முக்கியமாக விஸ்தாரமாக எழுதப்பட்டுள்ளன.
விஸ்வமனைத்தையும் பரிபாலிக்கும் பராத்பரனை சிவனாகப் போற்றுபவை சிவ புராணங்கள். விஷ்ணுவாக கீர்த்தனை செய்பவை வைணவ புராணங்கள். சக்தியாக போற்றுபவை தேவி புராணங்கள். இவை அந்தந்த உபாசகர்களுக்கு அந்தந்த தேவதைகளிடம் நிஷ்டையை பலப்படுத்துவதற்காக சர்வ ஜன உபயோகத்திற்காக வியாசர் அமைத்துக் கொடுத்த வழி முறை.
நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் நன்மைக்கே தெய்வம் துணை நிற்கும் என்ற செய்தியுடன் தேவ அசுர யுத்தங்கள் புராணங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளன.
வேத தர்மத்தை மட்டுமின்றி, துவாபர யுக முடிவு வரை (கலியுக ஆரம்பம்) விஸ்தரித்திருந்த பண்டைய அறிஞர்களின் ஞானம் அனைத்தையும் ஸ்வீகரித்து வேதத்திற்கு ஏற்புடையவற்றை புராணங்களில் அமைத்துள்ளார் வியாச பகவான்.
ஜோதிட சாஸ்திர ரகசியங்கள், சிற்ப சாஸ்திரம், சங்கீதம், நாட்டியம் போன்ற கலைகள், வேதாந்த தத்துவ கருத்துகள் – இவை ஏராளமாக புராணங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன.
புண்ணிய க்ஷேத்திரம், புனித தீர்த்தம், விஞ்ஞானம், ஆராதனைகள், விரதங்கள், தீட்சைகள், வழிபாடுகள் போன்றவை புராணங்கள் மூலமே நமக்குக் கிடைக்கின்றன.
நாம் தற்போது பாரத தேசமெங்கும் கொண்டாடும் பண்டிகைகள் அனைத்திற்கும் புராணங்களே ஆதாரங்கள். புராண வித்யையை ஆதாரமாகக் கொண்டே இமயம் முதல் குமரி வரை உள்ள மக்கள் தமக்கே உரித்தான முறையில் நாட்டியம், இலக்கியம், சிற்பம், கட்டிடம் போன்ற கலைகளையும் ஆச்சார பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
சனாதன தார்மீக எண்ணத்தை மனித இனத்திற்கு உயிர்மூச்சாக அளித்த அற்புத படைப்பான புராணங்களுக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்


