காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். காதல் எந்தத் தகுதியும் பார்க்காது. ஆனால், அதுவே கல்யாணம் என்று வரும்போது, எல்லாம் பார்க்கும்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி(32)யுடன் நகராட்சி அலுவலகத்தில் குடியாத்தம் அடுத்த செதுக்கரை பிள்ளையர் கோயில் தெருவைச் சேர்ந்த ரோஜா(20)என்பவா் தற்காலிக பணியாளராக பணி செய்து வருகிறார்.
அலுவலக வேலை நிமித்தமாக செல்வ பாலாஜியும் ரோஜாவும் அவ்வப்போது பார்த்துப் பேசி, பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியதாம். இருவரும் ஒருவரை ஒருவா் காதலித்து வந்த நிலையில், இவா்கள் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் காலை வழக்கம் போல் ஆணையாளர் செல்வ பாலாஜி அலுவலகம் வந்துள்ளார். பின்னர் காதலி ரோஜாவுடன் வெளியே சென்றுள்ளார்.
இருவருக்கும் அப்போது கல்யாண விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்நிலையில், திடீரென ரோஜா தன் கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் கையை அறுத்துக்கொண்டார். இதைப் பார்த்துப் பதறிப் போன ஆணையாளர் செல்வ பாலாஜி, ரோஜாவை பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயிலுக்கு அழைத்துச்சென்று அவர் கழுத்தில் தாலி கட்டினார்.
இருவரும் திருமணம் செய்து கொண்டதை அறிந்த ஆணையாளரின் குடும்பத்தினர், குடியாத்தம் காவல் நிலையத்தில் செல்வ பாலாஜியை ரோஜா குடும்பத்தினர் கடத்திவிட்டதாக கூறி புகார் கொடுத்தனர். அதேபோல், ரோஜா குடும்பத்தினரும் தங்கள் பெண்ணைக் கடத்தி விட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனிடையே ரோஜாவை அழைத்துக்கொண்டு ஆணையாளர் செல்வ பாலாஜி, ரோஜாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவர்களது கோலம் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இருவரையும் நகராட்சி அலுவலகத்திற்கே அழைத்து வந்தனர்.
அப்போது அங்கே வந்த செல்வ பாலாஜி குடும்பத்தினருக்கும், ரோஜா குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை அடுத்து ஆணையாளரை மட்டும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட, ரோஜா அவர்கள் வீட்டுக்கே சென்று தனது கணவரை அனுப்புமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நகராட்சி ஆணையர் பங்களாவுக்குச் சென்று செல்வ பாலாஜியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் இரு வீட்டாரிடமும் சமரசம் பேசி அனுப்பி வைத்தார். அப்போது காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஆணையாளர் செல்வ பாலாஜி, காதலி ரோஜாவை தனியே விட்டு விட்டு தான் மட்டும் காரில் ஏறி சென்றுவிட்டார். இந்தச் சம்பவத்தால் குடியாத்தம் பகுதி பெரும் பரபரப்படைந்தது.