மே 23ம் தேதி, எதிர்க்கட்சிகள் முடங்கும், அவர்களின் குற்றச்சாட்டுகளும் முடங்கிப் போகும் என்று பாஜக.,வின் தேசிய தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி நாடாளுமன்ற தொகுதியில் 2014 ம் ஆண்டு தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் நம்பிக்கையுடன் ராகுலை எதிர்த்து களமிறங்கியுள்ளார். நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டனர்.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் அமேதி நகரில் நேற்று திறந்த வாகனத்தில் சென்று ஸ்மிருதி இரானி வாக்கு சேகரித்தார். அப்போது, கூடியிருந்த கட்சி தொண்டர்களிடையே பேசிய அமித் ஷா, மோடியின் அரசு மீதும் பாஜகவின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு, பெருந்திரளாக கூடும் மக்களின் கூட்டமே சாட்சி! உத்தரப் பிரதேசத்தில் கடந்த தேர்தலைவிட கூடுதலான இடங்களில், பாஜக வெற்றி பெறும் !
மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகுதான் அமேதி தொகுதி பல வகைகளில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இந்திரா காந்தி குடும்பத்தினரை, அமேதி மக்கள் பலமுறை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், பல ஆண்டு காலமாக மின்சார வசதி கிடைக்காத கிராமங்களுக்கும் மோடியின் ஆட்சியில் மின்சார இணைப்பு வழங்கப் பட்டுள்ளது.
வாரிசு ஆட்சிமுறை ஒழிந்து நாடு முன்னேற வேண்டுமானால் மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைய வேண்டும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மே 23 ம் தேதியன்று முடிவுகள் வெளியாகி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் போது, எதிர்க்கட்சிகள் முடங்குவது மட்டுமில்லாமல், அவர்களது குற்றச்சாட்டுகள் எல்லாம் மௌனமாக முடங்கிப் போகும் என்று பேசினார்.




