கடலூர் அருகே கல்லூரி மாணவியை கொடூரமாகக் கொலை செய்து தப்பி ஓடியுள்ளார் இளைஞர் ஒருவர். இது தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அம்மன் கோவில் தெருவைத் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகள் திலகா (19). இவர் விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை தன்னுடைய வீட்டில் அவர் தனியாக இருந்த போது, வீட்டினுள் புகுந்த இளைஞர் ஒருவர், திடீரென அக்கல்லூரிப் பெண்ணை கொடூரமாகத் தாக்கியுள்ளார். அந்தப் பெண்ணின் வயிற்றுப் பகுதி கை, கால், பிறப்பு உறுப்பு என கண்மூடித் தனமாக கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அந்தக் கல்லூரிப் பெண், அலறியபடியே தனது மாமன் மகேந்திரனுக்கு போன் செய்துள்ளார். தன்னை கத்தியால் குத்தி விட்டதாக அவர் செல்போனில் கூறியதாகத் தெரிகிறது.
இதை அடுத்து பதறியபடியே சம்பவ இடத்திற்கு ஓடி வந்த அப்பெண்னின் மாமன் மற்றும் அவரது பெற்றோர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அப்பெண்ணை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கருவேப்பிலங்குறிச்சி பேரளையூரைச் சேர்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ்(19) எனும் இளைஞனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தனியாக இருந்த பெண்ணை கொடூரமாகக் கொலை செய்துள்ள இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தலைக் காதல் விவகாரத்தினால் இந்தக் கொலை நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



