நெல்லை மாவட்ட அமமுக.,நிர்வாகிகள் கூண்டோடு விலகி இன்று மாலை முதல்வர் முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்துள்ளனர்.
டிடிவி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.,வினர் கடந்த மக்களவைத் தேர்தலை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொண்டனர். ஆர்.கே.நகர், இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியைப் போலவே தமிழகம் முழுவதும் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில் கோடிகோடியாக செலவழித்தனர்.
ஆனால், அமமுக., சார்பில் போட்டியிட்ட அனைவரும் மோசமான தோல்வியை தழுவினர். அதிக பட்சமாக நான்கைந்து பேர் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்றனர்.
எனவே இனியும் அங்கு நீடிக்க இயலாத நிலையில் தற்போது மீண்டும் அ.தி.மு.க.,விற்கு திரும்பி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்த ஆர்.பி.ஆதித்தன். அண்ணாமலை உள்ளிட்டோர் ஏற்கனவே முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்து விட்டனர்.
இந்நிலையில் இன்று மாலை திருநெல்வேலி மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் மைக்கேல் ராயப்பன், வி.பி.மூர்த்தி, அசன்ஜாபர்அலி உள்ளிட்ட நெல்லை, துாத்துக்குடி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர். இவர்களில் மைக்கேல் ராயப்பன் நெல்லை தொகுதியில் போட்டியிட்டவர்.
அடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கியப் பிரமுகரான முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவும் அதிமுக.,வில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப் படுகிறது. இதனிடையே, நாளை செவ்வாய்க்கிழமை அன்று மாலை பழைய குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸ்ஸில் வைத்து முன்னாள் அமைச்சர், கழக அம்மா பேரவை இணை செயலாளர் இசக்கி சுப்பையா தலைமையில் அமமுக நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக கூறப்பட்டது. இந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து நெல்லை மாவட்ட அமமுக.,வினரின் புத்திசாலித்தனமான முடிவு தெரியும் என்கிறார்கள்.


