
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்துள் கடையநல்லூரில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் கடைக்குள் புகுந்தது. இதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் இசக்கி (வயது 45). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மாலை கடையநல்லூர் கால்நடை ஆஸ்பத்திரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவர் அந்த பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக இசக்கியின் மீது மோதியது. அதன்பிறகும் அந்த பஸ் நிற்காமல் தாறுமாறாக ஓடி அருகே இருந்த ஒரு இரும்பு கடைக்குள் புகுந்து நின்றது.
பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இசக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அந்த கடை சேதம் அடைந்தது. அப்போது யாரும் அந்த கடையில் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இசக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவர் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கணபதி சங்கரை கைது செய்தனர். பின்னர் அந்த பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.



